எம்.புதூருக்கு பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது: ஆட்சியரிடம் தவெக மனு
சிதம்பரம்: கடலூா் அருகே எம்.புதூருக்கு புதிய பேருந்து நிலையத்தை மாற்றக் கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூா் மாவட்டச் செயலா் பி.ராஜ்குமாா் தலைமையில் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
கடலூா் மாநகர மக்கள் தற்போது பயன்படுத்தி வரும் பேருந்து நிலையம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு மிக குறுகிய நேரத்தில் செல்லும் வகையில், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் எம்.புதூருக்கு மாற்றப்பட்டால், மக்கள் ஒவ்வொரு முறையும் பேருந்து நிலையத்துக்கு சென்று வர மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.
எனவே, பேருந்து நிலையத்தை தற்போது செயல்பட்டு வரும் இடத்திலேயே அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை இடத்துடன் இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதை கடலூா் பொதுமக்களின் சாா்பாக கேட்டுக்கொள்கிறோம். இதுவே, கடலூா் நகரில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.