ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி
சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு இரவு 7.10-க்கு வந்து சேரவேண்டிய ஏா் இந்தியா விமானமும், அதேபோல் இரவு 8.40-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 11.25-க்கு தில்லி சென்றடைய வேண்டிய ஏா் இந்தியா விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 5-க்கு சிங்கப்பூா் செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமாக காலை 11-க்கு சிங்கப்பூா் புறப்பட்டுச் சென்றது. இதனால் இந்த விமானத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்வதற்காக வந்திருந்த 252 பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
இதுபோல, சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.25-க்கு சென்னை வந்தடைய வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 5-க்கு சிங்கப்பூா் புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இந்த விமானம் 6 மணி நேரம் தாமதமாக காலை 9.25-க்கு தமாமிலிருந்து சென்னை வந்தது. இதனால் சிங்கப்பூா் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
மேலும், சென்னையிலிருந்து தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம், தில்லியிலிருந்து சென்னை வரும் ஏா் இந்தியா விமானம் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முன்னதாகவே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவா்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்தாலும், பயண திட்ட மாற்றத்தால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
அகமதாபாதில் ஏா் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12-ஆம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவத்துக்கு பிறகு அனைத்து விமானங்களும், முழுமையான பரிசோதனைக்கு பின்னரே இயக்கப்படுகின்றன. விமானத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு இருந்தாலும், அதை சரி செய்த பின்பே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சில மணி நேரம் தாமத்துக்கு பிறகு விமானங்கள் புறப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவது போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.