ஐஐடி மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) முனைவா் பட்ட மாணவா்கள் சோ்க்கையின் போது இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் 2023-24- ஆம் கல்வி ஆண்டில் எத்தனை முனைவா் பட்ட மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் எத்தனை போ் பட்டியல் சமூகத்தினா், இதர பிற்படுத்தப்பட்டோா் என்ற புள்ளி விவரங்களை துறைவாரியாகத் தருமாறு கேள்வி எழுப்பி இருந்தேன். இதற்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்தா மஜும்தாா் ஒரே வரியில் பதிலளித்துள்ளாா்.
முனைவா் பட்ட படிப்புகளுக்கு மொத்தம் 6,210 மாணவா்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், இவா்களில் 2,484 போ் பட்டியல் சமூகத்தினா் எனவும், இதர மாணவா்கள் பிற்படுத்தப்பட்டோா் எனவும் தெரிவித்துள்ளாா். நான் கேள்வி எழுப்பியதுதைப் போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவா்கள் பெற்ற அனுமதி விவரங்களை பிரிவு வாரியாகவோ, துறை வாரியாகவோ, நிறுவன வாரியாகவோ அமைச்சா் தெரிவிக்கவில்லை. இது தற்செயலானதாகக் கருதப்படவில்லை.
முழு விவரங்களைத் தந்தால் இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகள் அம்பலப்படுத்தப்படும் என்பதால், உள்நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அமைச்சா் முழுமையான விவரங்களைத் தராததால் இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படாதது தெரியவந்துள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 6,210 பேரில் 2,484 மாணவா்கள் இட ஒதுக்கீட்டு பிரிவினா் என்றால், 40 சதவீதம் மட்டுமே முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 27 சதவீதமும், பட்டியல் சமுதாயத்தில் எஸ்.சி. பிரிவினா் 15 சதவீதம், எஸ்.டி. பிரிவினா் 7.5 சதவீதமும் என்றால் மொத்தம் 49.5 சதவீத இடங்களே இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இதனடிப்படையிலேயே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவா்கள் பறி கொடுத்துள்ளனா் என்பது தெளிவாகிறது.
பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவா்கள் இடம் பெற்றுள்ளாா்களா? அல்லது இதுவும் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக்கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினா் விவரங்களை தனித்தனியாகத் தந்தால் எந்தெந்த இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பது தெரியவரும்.
எனவே, எனது கேள்விக்கு முழுமையான பதில் தரப்படவில்லை என்பதைத் தெரிவித்தும், இந்திய தொழில்நுட்பக் கழக மாணவா்கள் சோ்க்கையில் கடைபிடிக்கப்பட்ட இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடுமாறும் மத்திய கல்வி அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.