ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் மோதவிருக்கிறது.
இதன் காரணமாக ஏற்கனவே ஆஸி. வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதில் சிக்கல் எனக் கூறியிருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க வீரர்களும் கலந்துகொள்ள மாட்டார்கள் என சிஎஸ்ஏ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
8 தென்னாப்பிரிக்க வீரர்கள் - ககிசோ ரபாடா (குஜராத்), லுங்கி என்கிடி (ஆர்சிபி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), எய்டன் மார்கரம் (லக்னௌ), ரியான் ரிக்கல்டன் (மும்பை இந்தியன்ஸ்), கார்பின் போஷ் (மும்பை), மார்கோ யான்சென் (பஞ்சாப்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ்).
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் சிஎஸ்ஏ (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) கூறியதாவது:
ஐபிஎல் போட்டிகள் விளையாடுவது தனிநபரின் விருப்பம். யார் எங்கே விளையாடினாலும் மே 26ஆம் தேதி பயிற்சிக்கு வரவேண்டும். ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டதால் எங்களுடைய திட்டத்தை மாற்றமுடியாது.
ஏனெனில் எங்களது முதன்மையான நோக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்தான். இது குறித்து வீரர்களிடம் பேசிவிட்டோம் என்றார்.