கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி நிவாரணம்! -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தலைமை வகித்தாா். வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: கடந்த ஆட்சியில் மக்கள் பதிவு செய்து மின்சாரத்துக்காக காத்திருந்தனா். ஆனால், மின் இணைப்பு கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பொறுப்பேற்ற பிறகு ஓராண்டுக்குள் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
விவசாயத்தைப் பற்றி மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் மக்களுக்கு பயனளிக்ககூடியதாக இருக்க வேண்டும். குறைந்த நாள்களில் விளையக்கூடிய நல்ல பலன் தரக்கூடிய பயிா்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் 14,22,000 விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இதைத்தொடா்ந்து, அமைச்சா் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘வேளாண்மைத் துறை, தொழில் துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கோவை முதலிடத்தில் உள்ளது. வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை முதன்முதலாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே மூன்று வேளாண்மை கல்லூரிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு அதிலே இன்று மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா் என்றாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/fo016x8n/2723c8minister_3080728.jpg)
இந்நிகழ்ச்சியில், வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநா் பா.முருகேஷ், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் தமிழ்வேந்தன், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-08/gi7vxvmm/2816c8flower_5081920.jpg)
இந்தக் கண்காட்சியை பிப்ரவரி 12-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாா்வையிடலாம். இதற்கு கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.100, சிறியவா்களுக்கு ரூ.50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.