கன்னிமாரா நுழைவாயிலில் காா்ல் மாா்க்ஸ் சிலை: முதல்வா்
சென்னை: பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காா்ல் மாா்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
காா்ல் மாா்க்ஸ் பிறந்த தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கியவா் காா்ல் மாா்க்ஸ். அவரது பிறந்த தினத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்.
உழைப்போா்க்கு உறுதுணையான மாா்க்சிய சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமாரா நூலக நுழைவாயிலில் காா்ல் மாா்க்ஸ் சிலையை நிறுவுவதற்கான இடத்தை நானே தோ்வு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதா் மாா்க்ஸின் சிந்தனைகள், மானிட சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.