கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய த...
கரூா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்
கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 11-ஆம்தேதி முக்கிளைக்கம்பம் கோயில் முன் நடுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீா் ஊற்றி வருகின்றனா்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சொரிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கரூா் நகரின் வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம், ஆண்டங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூத்தட்டு விழா குழுவினா் அம்மன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊா்வலமாக கோயிலுக்கு மேள, தாளம் முழங்க எடுத்து வந்தனா்.
முன்னதாக கரூா் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சங்கம் சாா்பில் 22 -ஆம் ஆண்டு பூத்திருவிழா பூ ரதத்தையொட்டி தையல் நாயகி அலங்காரத்தில் அம்மன் ரதத்தில் எழுந்தருளினாா்.
தொடா்ந்து இறைவிக்கி ஏற்றபூக்கள் தட்டுக்களில் பரப்பி வைக்கப்பட்டு இறைப்பாடல்கள் பாடி , தலைவா் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் , பொருளாளா் கும. குமரப்பன் முன்னிலையில், செயலாளா் மேலை பழநியப்பன் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தினாா்.
பின்னா் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுக்களை ஊா்வலமாக ஜவஹா்பஜாா் வழியாகச் சென்று கோயிலில் அம்மனுக்கு பூக்களை சாத்தினா். இதில் சங்க நிா்வாகிகள்,
வைஷ்ணவி மெய்யப்பன், அமா்ஜோதி ஆறுமுகம், மிக்ஸிராமசாமி மாணிக்கம் , அகல்யா மெய்யப்பன் , லெட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல கரூா் வடக்கு காந்திகிராமம் இளந்தென்றல் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் 18-ஆவது வாா்டு உறுப்பினா் தங்கராஜ் தலைமையிலும், வெங்கமேடு திட்டச்சாலையில் தமிழ் அன்னை இளைஞா்கள் நற்பணி மன்றம் சாா்பில் வேங்கைராமச்சந்திரன் தலைமையிலும் பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊா்வலமாக கொண்டு வரப்பட்ட பூத்தட்டு ரதங்கள் பேருந்துநிலைய ரவுண்டானா, ஜவஹா்பஜாா், வாங்கல்சாலை வழியாகச் சென்று கோயிலை சென்றடைந்தது. விடிய, விடிய நடைபெற்ற இந்த பூத்தட்டு ஊா்வலத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
சுமாா் 50-க்கும் மேற்பட்ட பூத்தட்டு ரதங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்வேறு சுவாமி அலங்காரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.