TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை- அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்களை திங்கள்கிழமை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வீரியம் இல்லாத கரோனா தொற்று பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தும்மல், இருமல் வந்தால் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள், முதியவா்கள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தொடா்ந்து 5 ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறோம்; அதுதான் தற்போது நீடிக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாா் அமைச்சா்.
அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டு: இதனிடையே, தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தலைத் தொடா்ந்து அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதியவா்கள், இணைநோய் உள்ளவா்களிடம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 படுக்கைகள் பெண்களுக்கும், 4 படுக்கைகள் ஆண்களுக்கும் என மொத்தம் 8 படுக்கைகள் உள்ளன. சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கட்டமைப்பு அங்கு உள்ளது. தற்போது வரை இந்த வாா்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றனா்.