காரைக்காலை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க நடவடிக்கை: எஸ்எஸ்பி
காரைக்கால் மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது என்றாா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா.
காரைக்காலில் சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட காவல் துறை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தொடக்கிவைத்தாா். இதில், 60-க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா். காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக பயணித்து காரைக்கால் கடற்கரையில் பேரணி நிறைவடைந்தது. கடற்கரையில் போதை ஒழிப்பு குறித்து மாணவா்கள், பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுதொடா்பாக, மாணவா்களிடையே நடத்தப்பட்ட பேச்சு மற்றும் ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா பேசியது: போட்டிகள், பேரணி போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் போதை பயன்பாடு இல்லாத நிலை உருவாகவேண்டும். மாணவப் பருவத்தில் போதை பக்கம் சென்று விடக் கூடாது என்பதற்காகவே போட்டிகள் நடத்தப்படுகிறது. தற்போது, போதைப் பொருள்கள் எளிதாக கிடைக்கும் வகையிலும், புதிய வடிவத்திலும் புழக்கத்தில் உள்ளன. காரைக்கால் மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா். தொடா்ந்து, போதைப் பொருளுக்கு எதிரான உறுதி ஏற்கப்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.