பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!
காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்புப் பிரிவு, மதுவிலக்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, கடலோரக் காவல், புலனாய்வு, உளவுத்துறை எனப் பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண் காவலர்களும், 20 ஆயிரம் பெண் காவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர் காலங்களிலும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும், பண்பாட்டு விழாக்கள் - கோயில் திருவிழாக் காலங்களிலும், அரசியல் கூட்டங்கள் - தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் வருகை காலங்களிலும், சாதி - மதக்கலவரங்கள் நிகழும் காலங்களிலும், குண்டுவெடிப்பு - தீவிரவாத் தாக்குதல் போன்ற எதிர்பாராத பதற்றச்சூழலிலும், தீ விபத்து, சாலை விபத்து போன்ற அசாதாரணச் சூழல்களிலும், சாலை மறியல், மாணவர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட மக்கள் திரள் புரட்சிப்போராட்டங்கள் நடைபெறும் காலங்களிலும் இரவு-பகல் பாராது, கண் துஞ்சாது, கொடும்வெயில், கடுங்குளிர், அடைமழை என எதையும் பொருட்படுத்தாது, தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, மக்கள் தொண்டாற்றும் காவல்துறையினர் தங்கள் நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற முடியாத நிலையில் இருப்பதுதான் பெருங்கொடுமையாகும்.
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அத்தியாவசிய சலுகைகள் மறுக்கப்பட்டாலும், அரசின் அடக்குமுறை, அதிகாரிகளின் அழுத்தம் என்று எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அத்தனையையும் பொறுத்துக்கொண்டு காவல்துறையினர் கொத்தடிமைகள் போல வேலை செய்ய வேண்டிய கொடுஞ்சூழல் நிலவுகிறது. தங்கள் மீதான அதிகார அடக்குமுறை, உரிமை பறிப்பு, அடிப்படைத் தேவைகள், ஊதிய உயர்வு, போதிய விடுமுறை இன்மை உள்ளிட்ட எதுவொன்றிற்கும் அறவழியில் கூட போராட முடியாத கடுமையான கட்டுப்பாடு காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது.
அரசு மற்றும் உயர் அதிகாரிகள் மீதான தங்களின் ஆத்திரம், கோபம் மற்றும் இயலாமை ஆகியவைதான் பணியின்போது சந்திக்கின்ற மக்கள் மீது வெளிக்காட்டுகின்ற சூழல் உருவாகி, பொதுமக்கள்-காவல்துறை மோதலாக வெடிக்கிறது. காவலர்கள் தங்களது பணியில் எத்தகைய இடையூறு வந்தாலும் அனைத்தையும் தங்கள் மனதிற்குள் போட்டுப் பொசுக்கிகொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அதன் காரணமாக உருவாகும் மன அழுத்தமே காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைகளும் அரங்கேறுகிறது.
கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பதும், குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்ளுதல் மற்றும் பணியின் போது மரணம் அடைதல் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து, ஆண்டுக்கு ஏறத்தாழ 500 மரணங்களைத் தொடப்போகிறது என்பதும் வேதனையின் உச்சம்.
அர்ப்பணிப்புமிக்க கடமையுணர்வுடன் காவல்துறையினரின் கடும் உழைப்பையும், இணையற்ற ஈகத்தையும் உணர்ந்த காரணத்திலேயே, காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வளித்தல், அவர்களது மன அழுத்தத்தைப் போக்க ஆண்டுதோறும் இருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதித்தல், அவர்களது பணிக்கேற்ற ஊதியத்தை உறுதிப்படுத்துதல், ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரப் பணி, பெண் காவலர்களுக்கு 6 மணி நேரப் பணி, சுழற்சிமுறையில் பணி என்று பணிநேரத்தை வரையறை செய்தல், பெண் காவலர்களுக்கு முன்னுரிமை அளித்தல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு பணியிடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி தருதல் என காவல்துறையைச் சீர்திருத்தி, மறுகட்டமைப்புச் செய்து மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை தொடர்ந்து முன்வைக்கிறது நாம் தமிழர் கட்சி.
உயிர் காக்கும் மருத்துவர்கள், அறிவைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வரை அனைவரும் சங்கம் அமைக்கவும் அதன் மூலம் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெறவும் வாய்ப்பு உள்ள நிலையில் காவல்துறைக்கு மட்டும் அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படுவது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதாகும்.
காவல்துறையில் பணியாற்றுபவர்களும் நம்மைப்போல உயிரும், உணர்வும், இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள்தான் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணர்ந்துகொள்ள போகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கையை ஒருமித்த குரலில் அரசிடம் முன் வைத்து உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.