காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!
காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் நீடித்தது.
காஸா நகரிலுள்ள பாலஸ்தீனிய திடல் அருகே அமைந்துள்ள நிவாரண முகாம்களில் நிகழ்ந்த தாக்குதல்களில், அங்கு உயிர் பிழைப்பதற்காக இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்களில் 12 பேரும், குடியிருப்பு வளாகத்திலிருந்த 8 பேரும், அப்பகுதியிலிருந்த மேலும் 20-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டனர்.
காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக, அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடச் சொல்லியிருக்கும் சூழலில், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்காக, இஸ்ரேல் அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மூலோபய விவகாரங்களுக்கான அமைச்சர் ரோன் டெர்மெர் வாஷிங்டனுக்கு அடுத்த வாரம் புறப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, அமெரிக்க அரசு உயரதிகாரிகளுடன் அவர் காஸா சண்டை நிறுத்தம், ஈரான் உள்ளிட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார் என்றும் இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.