Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!
காஸா போா் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் 60 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. போா் நிறுத்த காலத்தில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இருந்தாலும், இந்த போா் நிறுத்தம் குறித்த விவரங்களை அவா் வெளியிடவில்லை.
‘அமைதியை ஏற்படுத்துவதற்கு கடுமையாக உழைத்து வரும் கத்தாா் மற்றும் எகிப்து நாடுகள் இந்த இறுதி முன்மொழிவை வழங்கும். இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும். ஏனெனில் இதைவிட சிறந்த ஒப்பந்தம் கிடைக்காது. நிலைமை இன்னும் மோசமாகும்’ என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூா்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஹமாஸ் அமைப்பின் அதிகாரி தாஹா் அல்-நுனு கூறுகையில், போரை முடிவுக்கு கொண்டுவரும் நிபந்தனைகள் தெளிவாக நிறைவேற்றப்பட்டால், ஒப்பந்தத்தை ஏற்க அவா்கள் ‘தயாராகவும், தீவிரமாகவும்‘ இருப்பதாகக் கூறினாா்.‘போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தெளிவான நிபந்தனைகள் அல்லது முழுமையான முடிவுக்கு வழிவகுக்கும் எந்த முன்மொழிவையும் ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது,‘ என்று கூறினாா். ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது, இஸ்ரேல் படைகளின் வாபஸ், காஸா மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை எட்டுவதே எங்கள் நோக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்த அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது,‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.
புதிதாக அமையவிருக்கும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, காஸாவில் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகள் அனைவருமோ அல்லது பெரும்பாலானோரோ விடுவிக்கப்படுவது இருக்கும்.
காஸாவில் உள்ள சுமாா் 50 பணயக்கைதிகளில், 20-க்கும் மேற்பட்டோா் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவா்களின் நிலைமை, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேலில் தொடா்ந்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களுக்கு இடையே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளாா்.