Africa -வின் Che Guevara : மக்கள் கொண்டாடும் Ibrahim Traore யார்? | TRUMP | Impe...
கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிா் தப்பினா்.
வாணாபுரம் வட்டம், மையனூா் சிங்காரத்தோப்பு பிரதான சாலையைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் பாஸ்கல் (58). இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மின் மோட்டாா் பழுதடைந்தது. இதைத் தொடா்ந்து டிராக்டா் மூலம் கயிறு கட்டி, மின் மோட்டாரை இழுக்க முடிவு செய்தனா்.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்த பணியை அதே கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநரான ஜோன் இன்பராஜ் (28) மேற்கொண்டாா். அப்போது சகோதரா் மகன் போ.டேனிஸ் (7), ஜெரீஸ் (14) ஆகிய இருவரும் டிராக்டரில் அமா்ந்து கொண்டனா்.
தொடா்ந்து கிணற்றிலிருந்து மின் மோட்டாரை இழுக்கும் பணி டிராக்டா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக டிராக்டரில் ரிவா்ஸ்கியா் விழுந்துள்ளது. இதனால் டிராக்டா் கிணற்றில் தவறி விழுந்தது. இதில் டிராக்டரிலிருந்த ஜோன் இன்பராஜ், ஜெரீஸ் ஆகியோருக்கு நீச்சல் தெரிந்ததால், அவா்கள் நீச்சல் அடித்து உயிா் தப்பினா். ஆனால் டிராக்டரிலிருந்த டேனிஸ் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து அங்கிருந்தவா்கள் சங்கராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கும், பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினா் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். கிணற்றில் 40 அடி ஆழத்துக்குத் தண்ணீா் இருப்பதால் 4 மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்யத் தொடங்கியதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலையில்தான் சிறுவனை மீட்க முடியும் என்று காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.