கீழ்பட்டியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
வேலூா்: குடியாத்தம் வட்டம், கீழ்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, குடியாத்தம் வட்டம், அங்கனாம்பள்ளி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள ராமா் கோயில் பின்புறம் 12 சென்ட் நத்தம் இடம் உள்ளது. இங்கு ராமா் கோயில் திருவிழா, காளியம்மன் கோயில் திருவிழா வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த இடத்தை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்து ஷீட் அமைத்து போலி ஆவணங்கள் தயாரித்து தங்கள் சொத்து எனக்கூறி பிரச்னை செய்கின்றனா். அந்த இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ லதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனு: குடியாத்தம் வட்டம் கீழ்பட்டி ஊராட்சி ரயில்வே கிராசிங்கில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். இந்த அறிவிப்புக்கு மாறாக சுரங்கப் பாதை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இப்பகுதியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப் பட்டது. இதுதொடா்பாக கூட்டத்தில், மாவட்ட நிா்வாகம், ரயில்வேதுறை இணைந்து மீண்டும் ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்கப்படும் என்று எம்.பி. தெரிவித்தாா். எனவே, பொது மக்களின் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 306 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, வேலூா் கோட்டாட்சியா் செந்தில் குமாா், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.