குடியரசு துணைத் தலைவருக்கான போட்டியில் நிதிஷ்குமார் கட்சி எம்.பி.?!
ஜகதீப் தன்கர் பதவி விலகிய நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார். இந்தச் செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்றைய அமர்வை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையேற்று நடத்தினார்.
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய தலைவர் யார் தேர்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பதவிக்கான போட்டியில் மாநிலங்களவை துணைத் தலைவரும், ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பியுமான ஹரிவன்ஷ் சிங் முன்னணியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த ஹரிவன்ஷ் சிங்?
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், ஹிந்தி நாளிதழான ‘பிரபாத் கபர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவராவார். அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் நீண்ட, நெடிய அனுபவம் கொண்ட அவர், முதுகலை பொருளாதாரம், இதழியல் பட்டப்படிப்புகளை நிறைவு செய்தவர். மேலும், 2020 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் மிக முக்கியமாக கட்சியாக இருப்பதால், பாஜக தலைமையும் ஹரிவன்ஷின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்றே தோன்றுகிறது.

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்படி?
நம்பத்தகுந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றிய ஜகதீப் தன்கர் மாதிரி ஒரு மாநில ஆளுநரையோ அல்லது நாடாளுமன்ற அனுபவமுள்ள ஒரு மூத்த மத்திய அமைச்சரையோ நியமிப்பது குறித்து பாஜக பரிசீலனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை கடைசியாக பணியாற்றிய இரண்டு குடியரசு துணைத் தலைவர்களான வெங்கையா நாயுடு மற்றும் ஜகதீப் தன்கர் இருவரும் பாஜகவில் மிகவும் நெருக்கமாகவும் அனுபவம் வாய்ந்தவர்களாவும் இருந்தனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, பிரிவு 68(2) இன் கீழ், குடியரசு துணைத் தலைவர் பதவியில் உள்ள காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல், காலியான உடனே சீக்கிரமாக நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இதனால், இந்தத் தேர்தல் அடுத்த 60 நாள்களுக்குள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவைத் தலைவருக்கான பணியை, இடைக்காலத் தலைவராக யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். துணைத் தலைவரின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. ஆனால், துணைத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் இந்தப் பணியைச் செய்யலாம்.
அரசியலமைப்பு விதிகளின்படி, இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக விரும்பும் எந்தவொரு வேட்பாளரும் இந்தியக் குடிமகனாகவும், குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
Who will be the next Vice President?
இதையும் படிக்க :ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!