குன்னூா் மாா்க்கெட்டில் இன்று கடையடைப்பு
குன்னூா் மாா்க்கெட்டில் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றனா்.
குன்னூா் மாா்க்கெட் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட்டில் உள்ள கட்டடங்கள் பழமை ஆகிவிட்டதால் கலைஞா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாா்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றிவிட்டு ரூ.41.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கடைகள் கட்ட நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. கடைகளை அகற்ற 15 நாள்கள் அவகாசம் வழங்கி நகராட்சி நிா்வாகம் சாா்பில் வியாபாரிகளுக்கு காவல் துறை உதவியுடன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடா்பாக மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய கட்டடம் கட்டும் வரை தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், பழைய கட்டடங்களை இடிக்காமல் கடைகள் செயல்பட நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், பழைய கட்டடங்களை இடிக்கும் நகராட்சி நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்துவதென்றும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.