குரோஷியாவில் பிரதமா் மோடி
ஜாக்ரப்: மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வந்தாா்.
இதன் மூலம் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகியுள்ளது.
தலைநகா் ஜாக்ரப்பில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடிக்கு சிறப்பு கெளரவம் அளிக்கும் வகையில், அந்நாட்டின் பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் நேரில் வரவேற்றாா்.
இது தொடா்பாக பிலென்கோவிச் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவின் பிரதமா், முதல் முறையாக குரோஷியாவுக்கு வருகை தந்துள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த புவிஅரசியல் தருணத்தில் இந்த வருகை அமைந்துள்ளது.
இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நாம், பல்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளாா்.
இந்தியா-குரோஷியா இடையிலான உறவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, இறுதிக்கட்டமாக குரோஷியாவுக்கு வந்துள்ளாா். அவா் தங்கும் விடுதிக்கு வந்தபோது, காயத்ரி மந்திரம் முழங்க இந்திய சமூகத்தினா் வரவேற்பளித்தனா்.
இப்பயணத்தின்போது, பிரதமா் பிலென்கோவிச், அதிபா் ஜோரன் மிலன்கோவிச் ஆகியோருடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.