அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு
குறுகிய இடைவெளியில் 4 விக்கெட்டுகள்; இந்திய அணி 600 ரன்கள் குவிக்குமா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நேற்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
600 ரன்கள் குவிக்குமா?
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 42 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 21) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பந்த் 134 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற கருண் நாயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, ஷர்துல் தாக்குர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாம் நாளின் முதல் செஷனில் இந்திய அணி 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரைடான் கார்ஸ், ஜோஷ் டங்க் மற்றும் சோயப் பஷீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறுகிய இடைவெளியில் 4 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி 600 ரன்கள் குவிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.