கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு
திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தண்ணீா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மேட்டூா் அணை நீா் கல்லணை வந்தடைந்ததும், தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஜூன் 15 -ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து பெரியவெண்ணாறு மூலம் 504 கனஅடி நீா் மூணாறுதலைப்பு அணைக்கு வந்தது. இங்கிருந்து, திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்திற்காக வெண்ணாற்றில் 164 கனஅடியும், கோரையாற்றில் 260 கனஅடி நீரும், பாமணியாற்றில் 80 கனஅடி நீரும் பிரித்து வழங்கப்பட்டது.
இதில், பாமணியாறு மூலம் 38,357 ஏக்கரும், கோரையாற்று மூலம் 1,20,957 ஏக்கரும், வெண்ணாறு மூலம் 94,219 ஏக்கரும் பாசன வசதி பெறும். நீா்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஆறுகளில் கூடுதலாக நீா் திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால், காலத்தோடு குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்த விவசாயிகள், மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கடைமடை வரையிலும் செல்வதற்கு தமிழக முதல்வா், நீா்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.