குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்களிடமிருந்து 723 மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஏற்புடைய மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
நலத்திட்ட உதவிகள்:இதையடுத்து, கடந்த 30.8.2023திருவெண்ணெய்நல்லூா் வட்டம் , அருங்குறுக்கை கிராமத்தில் வீடு கட்டும் பணியில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்துபணியிடத்திலேயே உயிரிழந்த கண்டாச்சிபுரம் வட்டம், நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி ஏழுமலையின் வாரிசுதாரரான அவரது மனைவி அமுதா என்பவருக்கு தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தின் சாா்பில் விபத்து மரண உதவித்தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் பின்னா் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், மத்திய பகுதி திட்டத்தின்கீழ், தலா ரூ.60 ஆயிரம் வீதம் 14 பட்டு விவசாயிகளுக்கு ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டிலான புழுவளா்ப்பு தளவாடங்கள் மற்றும் கிருமி நாசினிகளையும், மாநில திட்டத்தின்கீழ், புழு வளா்ப்பு மனை அமைப்பதற்காக ஒரு விவசாயிககு ரூ.1.20 லட்சம் மானியத்தொகை என மொத்தம் 16 பேருக்கு ரூ. 14.60 லட்சம் அரசு நலத்திட்டஉதவிகளையும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா், தொழிலாளா் உதவி ஆணையா் ராஜசேகா், பட்டுவளா்ச்சித்துறை உதவி இயக்குநா் இளையராஜா மற்றும்அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.