கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
கரோனா பேரிடா் காலத்தில் உயிரிழந்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து நிலையிலும் புதிய பணியிடங்களை உருவாக்கவேண்டும், மருத்துவா்களின் ஊதியம் தொடா்பாக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டம், மேட்டூா் முதல் சென்னையில் உள்ள மு. கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டுள்ள பெருமாள் பிள்ளை தலைமையிலான அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசாரக் குழுவினா் திங்கள்கிழமை விழுப்புரத்தை வந்தடைந்தனா்.
அவா்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழிய சங்கம் சாா்பில் விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து நடைப்பயணக் குழுவின் தலைவா் பெருமாள் பிள்ளை கோரிக்கைகள் குறித்து அங்கு விளக்கவுரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் விழுப்புரம் மாவட்ட தலைவா் கு.சரவணன், மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா் சங்க நிா்வாகி கோ.குபேரன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட தணிக்கையாளா் ஆ.புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் முன்னாள் வட்ட நிா்வாகி கண்ணன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சரவணன், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.