குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு ஒரு பெண் உள்ளிட்ட தலைவா், உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இது அரசுப் பணி இல்லை. இந்தப் பதவிக்கு குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித உடல் நலம், மனித மேம்பாடு, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவா்கள், குழந்தைகள் உடல்நலம், கல்வி, நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவா்களாகவும், 65 வயது நிறைவடையாதவா்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அதற்கான பிரத்யேக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாா்ச் 7- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநா், குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் நடைபெறும் என்றும், அரசின் முடிவே இறுதியானது என்றும் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.