கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக
ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி திடலில் பாராட்டு விழா நடைபெற்றது.
கர்நாடக பேரவையிலிருந்து தொடங்கும் வெற்றிப் பேரணி சின்னசாமி திடல் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் முண்டியடித்துக் கொண்டு உயரமான சுவர்கள், மரங்கள் மீது ஏறினர். மேலும், அத்துமீறி சின்னசாமி கிரிக்கெட் திடலுக்குள் நுழைய முயன்றதால் கர்நாடக காவல் துறையினர் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.
கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்த உயிரிழப்புக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.
அந்தப் பதிவில், “கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் இன்னும் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. அடிப்படை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டாததால், அங்கு குழப்பம் மட்டுமே நிலவியது. அப்பாவி மக்கள் இறந்தாலும், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் இருவரும் கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். இது காங்கிரஸ் அரசுக்கு வெட்கக் கேடானது” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி!