கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம்
கூலி திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஆக. 11) உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தை மீறும் குறிப்பிட்ட இணையதளங்களில் திருட்டுத்தனமாக கூலி படத்தை வெளியிடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று இந்தியா எங்கிலும் 36 இணையதள சேவை வழங்குதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஆக. 11) உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கூலி படத்தை இணையத்தில் முறைகேடாக வெளியிடுவதற்கான தடை கோருவது தொடர்பாக, படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது சட்டத்தை மீறி திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இணையதளங்களை முடக்குவதுடன், இனி வருங்காலத்தில் இதுபோன்ற இணையதளங்கள் ஏதேனும் வருமாயின் அவற்றையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய முறைகேடான நடவடிக்கைகள் தடுக்கப்படாவிட்டால் அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.