விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
கோயில் திருவிழாவில் வழிபாட்டு பிரச்னை: போலீஸாா் குவிப்பு
எருமப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு அம்மன் வீதிஉலா செல்வதில்லை எனக் கூறி மறியல் நடைபெற்றதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமபட்டி தேவராயபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு பழைமையான பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதற்கான உரிமை உள்ளது.
ஆனால், திருவிழா காலங்களில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் பகுதிக்கு அம்மன் திருவீதி உலா செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த சமுதாயத்தினா் நாமக்கல்- துறையூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த எருமப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் யுவராஜன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அசம்பாவிதம் தவிா்க்க அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். வருவாய்த் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்து பகுதிகளுக்கும் அம்மன் சப்பரம் வலம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.