இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு இங்கிலாந்துக்கு சாதகமா? பென் ஸ்டோக்ஸ் பதில்!
சகோதரியிடமே மோசடி; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் - பின்னணி என்ன?!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா. இவர், தூத்துக்குடி மில்லர்புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது சென்னையில் குடியிருந்து வருகிறார்.
59வது வார்டு கவுன்சிலரான இவர், சென்னையில் வசிப்பதால் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்கிற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

சகோதரியின் புகார்!
இந்த நிலையில், சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரியான பொன்னரசி என்பவரிடம் ரூ.17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப வழங்காததால் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.17 கோடி மோசடி செய்ததாக ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவு
போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாக இருந்தார். அதே நேரத்தில் அவரும் அவரது மனைவியும் வெளிநாடு செல்லக்கூடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலேசியாவிற்கு தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ராஜாவின் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரி ஆய்வு செய்தபோது அவர் மீது ஏற்கெனவே லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

நீக்கம்
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கூறியதன் அடிப்படையில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து உள்ளூர் அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம், “சண்முகநாதனின் மகன்தான் ராஜா. சண்முகநாதனின் அனைத்து தொழில்களையும் இவரே கவனித்து வந்தார். மாற்று சமூக பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் சண்முகநாதனுக்கு தெரிய வந்ததும் மகனை கண்டித்தார். காதலை கைவிடுமாறு கூறி பெண் பார்க்கத் தொடங்கினார். இந்த நிலையில், ராஜா தான் காதலித்து வந்த பெண்ணுடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் குடும்பத்திற்குள் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில்தான் தனியாக தொழில் தொடங்குவதற்காக ராஜா, தனது அக்கா பொன்னரசியிடம் பணம் வாங்கியுள்ளார்.

அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்கு தருவதாகச் சொல்லி, பொன்னரசியின் கணவருக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 2 ஏக்கர் நில பத்திரங்களை அடமானமாக வைத்து வங்கியில் ரூ.11 கோடி கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை அக்காவிற்கு தெரியாமல் வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தூத்துக்குடியில் கல்குவாரியில் முதலீடு செய்வதாக கூறி 300 சவரன் தங்கநகையையும் வாங்கிக் கொண்டு சுமார் 40 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் முடித்துக் கொண்டார். இப்படி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். ராஜா கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் வகித்து வரும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது” என்றனர்.