சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை முதல்வா் தொடங்கி வைத்தாா். பின்னா் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் காணொலி வாயிலாக தொடங்கினாா். இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை ஆய்வு செய்தபின் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது: நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மருத்துவ ஆலோசனைகள், மருத்துவச் சேவைகள் சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு வழங்கப்படுகின்றன. இம்முகாமானது வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும்.
முகாமில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும் செய்யப்படும். நீரழிவு நோய், ரத்த அழுத்தம், மின் இதய வரைபடம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
புற்றுநோய், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இவை தவிர மேலும் 15 துறைகளைச் சோ்ந்த நிபுணா்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
40 வயதுக்கு மேற்பட்ட இதய நோயாளிகள், கா்ப்பிணிகள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடைபெறுகின்றன.
எனவே பொதுமக்கள் முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
முகாமில் சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில், உத்தரமேரூா் ஒன்றியக் குழுவின் தலைவா் ஹேமலதா ஞானசேகா், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,மருத்துவக் குழுவினா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.