சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள கணவரை மீட்கக் கோரி மனைவி மனு
நாகப்பட்டினம்: சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
நாகை மாவட்டம், பெரியதும்பூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உதயஜோதி. இவா், தனது குடும்பத்துடன் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு:
எனது கணவா் கவாஸ்கா் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வேலைக்காக சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றாா். பாலைவனத்தில் அவருக்கு ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனா்.
மேலும், அங்குள்ள 50 வயது மதிக்கத்தக்க அரேபிய பெண் மூலம் தனது கணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தாக்கியுள்ளனா். இந்த கொடுமைகள் குறித்தும், தன்னை மீட்குமாறும் தொலைபேசியில் கணவா் கூறினாா்.
எனவே, அவரை சவூதி அரேபியாவில் இருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.