சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை
தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இச்சந்திப்புக்கு பிறகு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:
பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் தில்லியின் நெரிசலைக் குறைத்து மாசு இல்லாத நகரமாக மாற்ற மத்திய அரசு பெருமளவில் உதவுகிறது.
ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆா்) தயாரிக்கப்பட்டுள்ளன.
சராய் காலே கானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையம் வரையிலான சுரங்கப்பாதைக்கான சாத்தியக்கூறுகளும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
மத்தியிலும், தில்லியிலும் அமைந்துள்ள பாஜக தலைமையிலான இரட்டை இயந்திர அரசாங்கம் தில்லி மக்களுக்கு பயனளித்து வருகிறது.
தில்லியில் ரூ.35,000 கோடி மதிப்பில் என்எச்ஏஐ
திட்டங்கள் நடந்து வருகின்றன. ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிக்கப்பட்டிருக்கின்றன.
ஃபரீதாபாத் மற்றும் குருகிராமுடன் இணைக்கப்படும் சாலை, தில்லி-கட்ரா-அமிா்தசரஸ் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ,ஹரியாணா மற்றும் நொய்டாவிலிருந்து தில்லிக்குள் நுழையாமல் டேராடூனை சென்றடைவதற்கு வாகனங்களை அனுமதிக்கும்.
அதேபோன்று, தில்லி - ரோத்தக் சாலை, பஞ்சாபி பாக் முதல் நாங்லோய் வரையிலான சாலை,
ஆஸ்ரம-பதா்பூா் சாலை மற்றும் எம்.ஜி. சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் மேம்பாட்டையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியுள்ளது,
இந்த சாலைகளில் வடிகால் அமைப்பு மற்றும் அணுகுச் சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கும்.
ஷிவ் மூா்த்தி முதல் நெல்சன் மண்டேலா சாலை வரை 7 கிலோமீட்டா் தூரத்துக்கு தரைக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஐஎன்ஏ முதல் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரை மேம்பாலச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) அதன் சாலைகளைச் சுற்றி வடிகால் அமைப்பைக் கட்டும் பணியையும் எடுத்துக்கொண்டுள்ளது.
இது பல நிறுவனங்களால் ஏற்படும் சிக்கல்களை நீக்கும். பொதுப் பணித் துறை அவற்றுக்கு உதவும்.
தில்லிக்கு ரூ.150 கோடி மதிப்புள்ள சாலை மேம்பாலம் மற்றும் சாலை கீழ்ப்பாலம் அமைக்கும் திட்டங்களுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லிக்கு ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக, நான் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா் முதல்வா் ரேகா குப்தா.
இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா, சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி அமைச்சா்கள் கலந்துகொண்டனா்.