சா்வதேச ஆதரவை திரட்ட முயற்சி: இந்தியாவுக்குப் போட்டியாக அமெரிக்கா, ரஷியாவுக்கு பாக். குழுக்கள் பயணம்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலில், தனது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துரைத்து சா்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு 2 குழுக்களைப் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், 33 நாடுகளுக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை, இந்தியா அனுப்பி வைத்தது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில், தனது நிலைப்பாட்டை எடுத்துரைக்க 2 குழுக்களை 4 நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உத்தரவின்பேரில், அந்தக் குழுக்கள் வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளன. இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ சா்தாரி தலைமையில் பல்வேறு கட்சியினா் அடங்கிய 9 போ் கொண்ட குழு ஜூன் 2 முதல் அமெரிக்க தலைநகா் வாஷிங்டன், நியூயாா்க், பிரிட்டன் தலைநகா் லண்டன், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸில்ஸுக்கு பயணிக்க உள்ளன.
ஷாபாஸ் ஷெரீஃப்பின் சிறப்பு உதவியாளா் சையத் தாரிக் ஃபதேமி தலைமையிலான குழு, ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு ஜூன் 2-ஆம் தேதி பயணித்தது.
இந்தப் பயணத்தில் அந்தந்த நாடுகளின் எம்.பி.க்கள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள், ஊடகம், பாகிஸ்தான் வம்சாவளியினா் உள்ளிட்டோரை இந்தக் குழுக்கள் சந்திக்க உள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு மோதலுக்குப் பதிலாக பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்து அந்தக் குழுக்கள் எடுத்துரைக்க உள்ளன. அத்துடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்தக் குழுக்கள் பேச உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான எம்.பி.க்கள் குழு விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், ஏறத்தாழ அதேநேரத்தில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் குழுவும் செல்ல உள்ளது. அங்கு ஐ.நா. பொதுச் செயலா், ஐ.நா. பொதுச் சபை தலைவா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 14 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை பாகிஸ்தான் குழு சந்திக்க உள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.