சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 முதல் அமல்
சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இத்தகைய எரிபொருளில் இயங்காத பிற பேருந்துகள் தில்லிக்குள் அனுமதிக்கப்படாது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து இந்திய அனுமதி, ஒப்பந்த வாகனம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி அனுமதிகள் பெற்று, தில்லிக்குள் நுழையும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தில்லியில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு ஏற்படுவது ஆண்டுதோறும் வழக்கமாகியுள்ளது. காற்று மாசுக்கான காரணிகளில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையும் ஒன்றாக உள்ளது.
குறைந்த அளவில் புகைளை வெளியிடும் எரிபொருகளில் இயங்கும் பேருந்துகள் பெருமளவில் வழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், மாசுபடுத்தும் எரிபொருளில் இயங்கும் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் தில்லிக்கு வருகின்றன.
கடந்த 2024 மத்தியில் அல்லது 2025 தொடக்கத்துக்குள் குறைந்த அளவில் புகை வெளியிடும் எரிபொருளில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறுமாறு ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், உத்தரக்கண்ட், மத்திய பிரதேசம், ஜம்மு } காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதச அரசுகளுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், ஆணையம் நிர்ணயித்த காலகெடுவுக்கள் மாநில அரசுகள் இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை.
இந்நிலையில், பழைய மற்றும் மாசுபடுத்தும் பேருந்துகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி வாகன பதிவெண் அடையாளம் காணும் அமைப்பு மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள முறைகள் (ஆர்எஃப்ஐடி) மூலம் எல்லைகளில் பேருந்துகளைக் கண்காணிக்குமாறு தில்லி போக்குவரத் துறை மற்றும் போக்குவரத்து காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதிய விதியின் குறித்து தங்கள் மாநிலத்தில் உள்ள பேருந்து நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.