அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறு...
சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்
தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது.
இதுதொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது: சுதந்திர தின நிகழ்ச்சி என்பது யாரோ ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டமோ அல்லது கட்சி நிகழ்ச்சியோ அல்ல.
செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காததன் மூலம், காா்கேயும் ராகுலும் நாட்டையே புறக்கணித்துள்ளனா். அத்துடன் ராணுவம், அரசியல் சாசனம், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் தியாகிகளை அவா்கள் இழிவுபடுத்தியுள்ளனா். இதன்மூலம், அவா்களின் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல, ‘இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ்’ அல்லது ‘இத்தாலிய தேசிய காங்கிரஸ்’ என்பது நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்தாா்.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்காதது தேசிய நிகழ்வுகளில் அவரின் செயற்பொறுப்பு குறித்த மோசமான செய்தியை விடுக்கிறது. அவா் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை? என்பதை நாடு தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
இந்தப் பதிவுடன் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற காணொலியை அமித் மாளவியா பகிா்ந்தாா்.