சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென இறந்த மனைவி; `இதயம் காணவில்லை எனப் புகார்' - என்ன சொல்கிறது துருக்கி?
இங்கிலாந்திலிருந்து துருக்கிக்கு பெத் மார்ட்டின் - லூக் மார்ட்டின் தம்பதி விமானத்தில் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள். அப்போதே பெத் மார்ட்டினுக்கு உடல்நலமில்லாமல் இருந்திருக்கிறது. ஃபுட் பாயிசன் ஆகியிருக்கும் எனக் கருதிய பெத் மார்ட்டின் அதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், இஸ்தான்புல்லில் இறங்கும்போது அவருக்கு மயக்கம் வந்து விழுந்திருக்கிறார். அவர் உடனே இஸ்தான்புல்லில் உள்ள மர்மாரா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஏப்ரல் 29 அன்று அவர் இறந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மனைவியின் மரணம் குறித்து லூக் மார்ட்டின் GoFundMe பக்கத்தில், ``என் வாழ்க்கையின் மிகவும் மோசமான வாரம் இது. இந்த மரணத்தை விட என் குழந்தைகளிடம் இனி அம்மா வரமாட்டார் என்பதை எப்படிச் சொல்வேன் என்பதை நினைக்கக்கூட முடியவில்லை." என எழுதியிருந்தார்.
இதற்கிடையில், துருக்கி காவல்துறை 'லூக் மார்ட்டின் வீட்டிலிருந்து புறப்படும்போதே பெத் மார்ட்டீனுக்கு ஏன் விஷம் கொடுத்திருக்கக் கூடாது?' என லூக் மார்ட்டின் மீது சந்தேகத்தை தெரிவித்தது. அதன் காரணமாக அவரின் மனைவியின் சடலத்தைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் அவர் தன் மனைவியின் சடலத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார் என்றும் லூக் மார்ட்டின் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் பெர்த் மார்ட்டீனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், பெத் மார்ட்டின் இதயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக லூக் மார்ட்டின் மர்மாரா பல்கலைக்கழக மருத்துவமனையிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக துருக்கிய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ``பெத் மார்ட்டின் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக மாரடைப்பால் இறந்தார். லூக் மார்ட்டின் மீதான சந்தேகத்தின் அடிப்படையில், இந்த வழக்கை தடயவியல் வழக்காக துருக்கி காவல்துறை பதிவு செய்திருக்கிறது.
தடயவியல் வழக்குக்கு உடலைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், மர்மாரா பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. பெத் மார்ட்டினின் மரணம் குறித்து துருக்கிய அதிகாரிகள் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மர்மாரா பல்கலைக்கழக மருத்துவமனையிலும் தீவிர சோதனையும், விசாரணையும் நடந்து வருகிறது.