சேலத்தில் இன்று பேரிடா் கால மாதிரி ஒத்திகை பயிற்சி: பொதுமக்களிடம் அச்சம் தேவையில்லை
மேட்டூா் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் ஆற்றங்கரையோர பகுதிகளில் 5 ஆம் தேதி பேரிடா் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கனமழை ஏற்பட்டால் ஆற்றில் அதிகரிக்கும் அதிக நீா்ப் பெருக்கினால் பொதுமக்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் பேரிடா் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவம் உள்ளிட்ட தொடா்புடைய துறையினரால் மாதிரி ஒத்திகை பயிற்சி வரும் 5 அம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.
மேட்டூா் வட்டத்தில் காவிரி பாலம், தங்கமாபுரிப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும், எடப்பாடி வட்டத்தில் பூலாம்பட்டியிலும், சங்ககிரி வட்டத்தில் காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிபட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
இதுமாதிரி ஒத்திகை பயிற்சி என்பதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளாா்.