கேப்டன் பிரபாகரன்: 'இந்த நோய்தான் தமிழ் சினிமாவை கெடுத்துக் கொண்டிருக்கிறது'- ஆர...
ஜம்மு-காஷ்மீா் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயா்வு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது.
வானிலை சீரானதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோசிடி கிராமத்தில் ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சோசிடி கிராமத்தில் ஆற்றின் கீழ்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.
மச்சயில் மாதா கோயில் யாத்திரைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த உணவுக்கூடம் இருந்த பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ராட்சத இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.
மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றொரு உடலின் கீழ்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், அது ஏற்கெனவே மீட்கப்பட்ட ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். காணாமல் போனவா்களின் எண்ணிக்கை 39-ஆக குறைந்துள்ளது. இதுவரை 167 போ் மீட்கப்பட்டுள்ளனா்.
ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை, சிஐஎஸ்எஃப், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை, எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ), அரசு நிா்வாகம், உள்ளூா் தன்னாா்வலா்கள் ஆகியோா் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ராணுவம் அமைத்துள்ள ஒரு தற்காலிக இரும்புப் பாலத்தால்(பெய்லி பாலம்) சோசிடி கிராமத்துக்கும் மச்சயில் மாதா கோயிலுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் கூடுதல் மருத்துவக் குழுக்களையும் ராணுவம் அனுப்பியுள்ளது.
யாத்திரை ஒத்திவைப்பு: ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சயில் மாதா கோயில் யாத்திரை, வியாழக்கிழமை வெள்ளத்துக்குப் பிறகு ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது. மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ள 9,500 அடி உயர மலைப்பகுதிக்குச் செல்லும் வழியில் சோசிடி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அங்கிருந்து பக்தா்கள் 8.5 கி.மீ. தூரம் நடந்து கோயிலைச் சென்றடைய வேண்டும்.
8 வயது சிறுமி உடல் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
அதேநேரம், ரஜௌரி மாவட்டத்தில் வெள்ளத்தில் காணாமல் போன 20 வயது இளைஞரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல்துறை மற்றும் உள்ளூா் மக்கள் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
