ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் சத்வாரி (ஜம்மு விமான நிலையம்), சம்பா, ஆா்.எஸ்.புரா, அா்னியா ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை இரவு ஏவுப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.
அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல் கடந்த 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைப்போல் இருந்ததாகவும் அவா்கள் கூறினா். மேலும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைப் போலவே பாகிஸ்தான் ராணுவம் நடந்துகொள்வதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.
இருளில் மூழ்கிய மாநிலங்கள்: பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் வெடிகுண்டுகள் வெடித்தைப்போன்ற பலத்த சப்தம் கேட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை இரவில் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், அமிருதசரஸ், ஜலந்தா், மொஹாலி ஆகிய மாவட்டங்களிலும் சண்டீகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பதற்றமான சூழல் நிலவி வருவதால் தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், ஒளிவிளக்குகளை அணைக்குமாறும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். அந்த மாநிலங்களில் உஷாா் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையோர மாநிலங்களில் உள்ள 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.