ஐயாறப்பர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!
பிரசித்தி ஐயாறப்பர் திருக்கோவிலில் சப்தஸ்தான திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கே சித்திரை மாத சப்தஸ்தான திருவிழா 13 நாள்கள் ஆண்டுதோறும் நடைபெறும். இதேபோல் இந்தாண்டு கடந்த 01ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் ஐயாறப்பர் அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாள், ஐயாறப்பர் அம்பாள், பஞ்சமுக தெய்வங்களும் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து ஐயாற ஆரூரா, ஓம் நமசிவாயா, ஓம் முருகா, ஓம் சக்தி என கோசமிட்ட படி இழுத்தனர்.
தொடர்ந்து வருகின்ற 12 ம் தேதி ஏழூர் சப்தஸ்தான தலங்களுக்கு ஐயாறப்பர் அம்பாள் கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை திருமணக் கோலத்தில் வெட்டிவேர் பல்லாக்கிலும் சப்த்தஸ்தான தலங்களுக்குச் சென்று 13 ஆம் தேதி திருவையாறு தேரடி திடலில் 7 ஊர் கண்ணாடி பல்லாக்குகளும் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.