24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!
24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் ஸ்டாலின், கடந்த மே 5 ஆம் தேதி 42வது வணிகர் நாளையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்” என அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 05.06.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (டி) எண்.207, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (கே2) துறை, நாள் 08.05.2025-மூலம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: பாகிஸ்தான் தாக்குதலில் பெண் பலி!