ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி
ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது:
ஞானசேகரன் வழக்கை பற்றி முதல்வா் பெருமையாகப் பேசுகிறாா். நான் இந்தத் தீா்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞானசேகரனுக்கு எப்படி அவ்வளவு செல்வாக்கு வந்தது? அவருக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டவா்கள் யாா் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் 4 மாதங்களில் தீா்ப்பு வந்துள்ளது. இதேபோன்று கடந்த 4 ஆண்டுகளில் பல பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு ஏன் தீா்ப்பு வரவில்லை?
மத்திய அரசு 70 விமான நிலையங்களை கடந்த 10 ஆண்டுகளில் 140 விமான நிலையங்களாக அதிகரித்துள்ளது. மேலும் இன்னும் 2 மாதங்களில் தூத்துக்குடி விமான நிலையம் திறக்கப்பட உள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மாநில பொதுச்செயலா் பொன்பாலகணபதி, மாநில துணைத் தலைவா் சசிகலாபுஷ்பா உள்பட பலா் பங்கேற்றனா்.