டிவிட்டருக்குச் சென்றவரை ரூ. 853 கோடி கொடுத்து வேலையில் தக்கவைத்துக்கொண்ட கூகுள்!
கூகுள் நிறுவனத்தின் பணியில் இருந்து டிவிட்டருக்கு (எக்ஸ்) மாற முயன்றவரை ரூ. 853 கோடி கொடுத்து (100 மில்லியன் டாலர்) வேலையில் தக்கவைத்துள்ளது கூகுள் நிறுவனம்.
இவ்வளவு தொகையைக் கொடுத்து வேலையில் தக்க வைத்தது வேறு யாரையும் அல்ல, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் என்பவரைத்தான்.
கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கும் யூடியூப் விடியோ தயாரிப்பு வியூகங்களுக்கும் முக்கிய காரணியாக இவர் செயல்பட்டார்.
2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து டிவிட்டர் (இப்போது எக்ஸ்) நிறுவனத்துக்கு மாற இவர் திட்டமிட்டுள்ளார். இதனால், ரூ. 853 கோடி கொடுத்து வேலையில் இவரைத் தக்கவைத்துள்ளது கூகுள். அதுவும் 15 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு பெரியத் தொகையைக் கொடுத்துள்ளது. தற்போது இதன் மதிப்பு மிகவும் அதிகம்.
ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் காம்நாத் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் யூடியூப் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் குறித்துப் பேசியபோது இந்த சுவாரசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ’டெக் கிரஞ்ச்’ செய்தி நிறுவனத்தின் தரவுகள்படி, நீல் மோகனைத் தக்கவைக்க கூகுள் வழங்கிய சலுகைத்தொகையானது, நிலையான பங்குகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
நீல் மோகன் யார்?
இவர் அமெரிக்க வாழ் இந்தியர். கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் மின்பொறியியல் படிப்பை முடித்து, அக்செஞ்செர் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த நீல் மோகன், பின்னர், நெட்கிராவிட்டி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
சிறிது நாள்களுக்குப் பிறகு டபுள்கிளிக் என்ற நிறுவனத்தில் சேர்ந்து அந்நிறுவன வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவரானார்.
2007ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் டபுள்கிளிக் நிறுவனத்தை 3.1 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இவ்வாறு கூகுள் நிறுவனத்துக்கு பணிபுரிந்துவந்த நீல் மோகன், அந்நிறுவனத்துக்கான வணிக விளம்பரங்களைக் கவனித்துவந்தார்.
இதையும் படிக்க | இந்தியர்கள் பிலிப்பின்ஸ் செல்ல விசா தேவையில்லை: முழு விவரம்!