பாகிஸ்தான் கொடி: "என்னை விட்டுடுங்க" - சிறுவனைச் சிறுநீர் கழிக்கக் கட்டாயப்படுத்...
தனியார் வங்கியால் விவசாயி தற்கொலை! தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!
விவசாயியின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் விவசாயியான வடிவேலு என்பவர், தனியார் வங்கியில் கடன்பெற்று, அதனைத் திரும்பச் செலுத்தத் தாமதமானதால், அவரை வங்கி ஊழியர்கள் தரக்குறைவாகத் திட்டியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வடிவேலு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், விவசாயியின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி மீது, புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேலு, தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணையைத் திரும்பச் செலுத்த 20 நாள்கள் தாமதமானதால், அவரை வங்கி ஊழியர்கள் தரக்குறைவாகத் திட்டியுள்ளனர். இதனால், மன உளைச்சலான வடிவேலு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது, பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
விவசாயி வடிவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் பணிகளை மேற்கொள்வதற்காகத்தான், தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருக்கிறார். இந்தக் கடனுக்கான தவணையை சரியாகச் செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால்தான், ஏப்ரல் மாதத்துக்கான தவணையை வடிவேலு செலுத்தவில்லை.
இதனால், அவரது வீட்டுக்கே சென்று, அவரைத் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார். கடன்பெற்ற விவசாயிகளை திட்டவோ மிரட்டவோ எந்த அதிகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. காலக்கெடுக்குள் வழங்கவில்லையென்றால்தான், அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
வடிவேலுவின் தற்கொலைதான் கடைசியாக இருக்க வேண்டும். இனி எந்தவொரு விவசாயியும் இதுபோல் தற்கொலை கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும்வகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. புதிய சட்டத்தின்படி, வடிவேலுவின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகளும் கூட்டுத்துறை வங்கிகளும் கடன் வழங்க மறுப்பதால்தான், தனியார் வங்கிகளில் விவசாயிகள் சிக்கிக் கொள்கின்றனர். ஆகையால், சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.