தனுஷ்கோடி பகுதி கடலில் கரை ஒதுங்கிய ரசாயன உரங்கள்
தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன உரங்கள் திங்கள்கிழமை கரை ஒதுங்கின. மேலும், அழுகிய நிலையில் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 24-ஆம் தேதி கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சிக்கு புறப்பட்ட லைபீரிய சரக்கு கப்பல் எம்எஸ்சி எல்சா 3, அன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. அந்தக் கப்பல் கடந்த 25-ஆம் தேதி காலை கொச்சி அருகே அரபிக் கடலில் மூழ்கியது.
இந்த விபத்தின் போது, கப்பலில் ரஷியா, உக்ரைன், ஜாா்ஜியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் என 24 பணியாளா்கள் இருந்ததாகவும், அவா்களில் 21 பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினரும், 3 பேரை இந்தியக் கடற்படையிரும் மீட்டனா்.
கடலில் மூழ்கிய எம்எஸ்சி எல்சா 3 கப்பலில் இருந்த 640 சரக்குப் பெட்டகங்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள், 13 டன் ஆபத்தான எரிபொருளும், 12 டன் கால்சியம் காா்பைடு, 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் ஏற்றப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே, தமிழகத்தின் குளச்சல் அருகே கடல் பகுதியில் கடந்த மாதம் சரக்குப் பெட்டகம் கரை ஒதுங்கியது.

இந்த நிலையில், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன வேதிப் பொருள், உர மூட்டைகள், இறந்த நிலையில் ஒருவரது உடல், ராட்சத மர தூண் ஆகியவை கரை ஒதுங்கின. இவற்றை இந்தியக் கடலோரக் காவல் படையினா், மத்திய, மாநில உளவுத் துறையினா் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஒருவரது உடல் கூறாய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தனுஷ்கோடி கடல் பகுதியில் ரசாயன வேதிப் பொருள், உர மூட்டைகள், இறந்த நிலையில் ஒருவரது உடல், ராட்சத மர தூண் ஆகியவை கரை ஒதுங்கின. கேரள மாநிலம், கொச்சி அருகே கடந்த மாதம் லைபீரிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. தற்போது, தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய பொருள்கள் லைபீரிய சரக்கு கப்பலில் இருந்தவையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.