TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.