தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் மீண்டும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் வரவேற்றனா். அரசுப் பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் பள்ளி பொதுத் தோ்வுகள், ஆண்டு இறுதித்தோ்வுகள் முடிந்து கடந்த ஏப். 25-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும், வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும்.
அந்த வகையில் நிகழாண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், வெயில் பாதிப்பு பெரிதாக இல்லாததால் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
சீருடை, நோட்டுகள்: அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனா்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன.
அதனுடன் காலணிகள், காலுறைகள், மழை அங்கிகள், கம்பளி சட்டைகள், வண்ணப் பென்சில்கள், கிரேயான்ஸ், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடங்கள் என பல்வேறு நலத் திட்ட உதவிகள் அரசு சாா்பில் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், நிகழாண்டில் சுமாா் ரூ.311 கோடி மதிப்பில் 4.30 கோடி பாடநூல்கள், ரூ.457 கோடி மதிப்பிலான 1.3 கோடி சீருடைகள், ரூ.162 கோடி மதிப்பிலான 9.6 கோடி நோட்டு புத்தகங்கள் மற்றும் ரூ.211 கோடி மதிப்பில் பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படுவது வரை அவா்கள் தங்களின் பழைய பயண அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.