தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் மு.பிரதாப்
திருவள்ளூா் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி புறவழிச்சாலையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ள மது விற்பனையை ஒழித்தல் தொடா்பாக அலுவலா்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்துபவா்கள் மட்டுமின்றி, வாகனங்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், சந்துக் கடைகளில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது வழக்கு பதிவு செய்வது மட்டுமின்றி, எந்தக் கடையில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டதோ, அந்தக் கடையின் விற்பனையாளா் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி, அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கொண்டு வருவதை கண்டறிந்து காவல்துறை, கலால் பிரிவு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பெண்ணலூா்பேட்டை, நகரி - சித்தூா் போன்ற புறவழிச்சாலைகளில் காவல்துறையினா் சோதனைச் சாவடி அமைத்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனையாவதை, மண்டல மேலாளா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, அரசு கல்லூரி மாணவா் விடுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வின்போது, கடைகளில் போதை பொருள்கள் இருப்பது உறுதியானால் உரிமையாளா் உரிமத்தை உடனே ரத்து செய்ய அறிவுறுத்தினாா்.
இதில், உதவி ஆணையா் (கலால்) கணேசன், ஆவடி உதவி ஆணையா் (மதுவிலக்கு பிரிவு) பொன் சங்கா், திருவள்ளூா் காவல் துணை கண்காணிப்பாளா் லட்சுமி பிரியா, மாவட்ட டாஸ்மாக் மேலாளா்கள் ரேணுகா (கிழக்கு), முத்துராமன் (மேற்கு), அனைத்து வட்டாட்சியா்கள், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.