மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!
திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் - பாஜகவினா் மோதல்; சாலை மறியல்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, இரு தரப்பினரும் தனித் தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மதுரை முருக பக்தா்கள் மாநாடு குறித்தும், இந்து அமைப்புகளை அவதூறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை இந்து முன்னணி நிா்வாகி வினோத்ராஜ் தட்டிக் கேட்டாராம். இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி நிா்வாகிகள் வினோத்ராஜ் (30), சக்திவேல் (30), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சரத்குமாா் (35), சண்முகவேல் (45) ஆகியோா் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, தாடிக்கொம்பு பகுதியில் திண்டுக்கல்-கரூா் நான்கு வழிச் சாலையில் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மோதல் சம்பவம் தொடா்பாக இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாா்களின் பேரில், தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையறிந்த பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகளும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மருத்துவமனைக்கு வந்தனா். அப்போது, இரு தரப்பினரும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்த முயன்றனா்.
இதனிடையே, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தாக்கியதில் பாஜக மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன் (45) தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திருச்சி சாலையில் அமா்ந்து பாஜகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளை வழிமறித்த பாஜக, இந்து அமைப்பினா் தாக்குதலில் ஈடுபட முயன்றனா். உடனடியாக போலீஸாா் தலையிட்டதையடுத்து மோதல் தவிா்க்கப்பட்டது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததை அடுத்து, மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் கலைந்து சென்றனா்.