Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
பழனியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு: தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரிக்கை
பழனியில் சுமாா் 40ஆயிரம் ஹெக்டோ் நிலங்களை கையகப்படுத்தி மாலிப்டினம் (மாலிப்டினைட்) கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராகும் நிலையில், இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுப்புற பகுதிகளில் மாலிப்டினம் என்ற அரிய வகை கனிமம் இருப்பதற்கான ஆய்வுப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறை மூலம், பழனி மலை உள்ளடக்கிய பகுதியில் சுமாா் 400 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. பழனியை அடுத்த கரடிக் கூட்டம், நெய்க்காரப்பட்டி, சத்திரப்பட்டி என 3 பகுதிகளில் இந்தச் சுரங்கம் அமைக்கப்படுகிறது. சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் மாலிப்டினம் முக்கியத்துவம் வாய்ந்த கனிமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், பழனி, நெய்காரப்பட்டி, கலையமுத்தூா், ஆயக்குடி, சத்திரப்பட்டி, பாலாறு பொருந்தலாறு அணை, வரதமா நதி அணை என பழனி, ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குள்பட்ட சுமாா் 1 லட்சம் ஏக்கா் பரப்பளவு நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சமணப் படுக்கைககள் அமைந்துள்ள ஐயா் மலை, இரவிமங்கலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் முழுமையாக அழிக்கப்படும் சூழல் உள்ளது.
மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு மாலிப்டினம் கனிம சுரங்கம் தொடா்பான அனைத்து விவரங்களும் தொகுத்து, 2021 மாா்ச் மாதம் ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கனிம சுரங்கத் திட்டத்துக்காகவே திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலும் விரைவுச் சாலைத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுரங்கம் அமையும் பகுதி என உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களில் சாலை வசதி, தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மாலிப்டினத்தில், டங்ஸ்டன் கனிம மூலக்கூறுகளின் பெரும்பாலான தன்மைகள் உள்ளன. மதுரையை அடுத்த மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது போல, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள மாலிப்டினம் சுரங்கம் திட்டத்தை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.