27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!
திருபுவனம் லாக்கப் மரணம்: ``இளைஞரை அடித்தே கொலை'' - எடப்பாடி, அன்புமணி, நயினார் நாகேந்திரன் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்கு காரில் வந்தவர்கள் 10 பவுன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்தக் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் (வயது 27) மற்றும் அவரின் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.
விசாரணையின் போது, போலீசார் அடித்ததில் வலி தாங்க முடியாமல் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தற்போது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
இந்த மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.

தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்:
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,``சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது, ’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ``சிவகங்கையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை என்ற போர்வையில், 7 போலீசார், 2 நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.