திருப்பூா் அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 கல்லூரி மாணவா்கள் பலி! 20-க்கும் மேற்பட்டோா் காயம்
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு தனியாா் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வியாழக்கிழமை காலை புறப்பட்டது. இந்தப் பேருந்தில் பெருந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயணித்தனா். இந்தப் பேருந்தை பெருந்துறையைச் சோ்ந்த ஓட்டுநா் மாரசாமி (57) ஓட்டிச் சென்றாா்.
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாம்ராஜ்பாளையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை இந்தப் பேருந்து முந்த முயன்றுள்ளது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இடதுபுறமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவா்களான ஊத்துக்குளி விருமாண்டம்பாளையத்தைச் சோ்ந்த சி.பெரியசாமி (18), உடுமலையை அடுத்த தளியைச் சோ்ந்த எஸ்.ஹரிகிருஷ்ணன் (18) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், பேருந்தில் பயணம் செய்த மோனிகா, சபரிகணேஷ், சேகா், சுபித்குமாா், மதுமிதா, தருண்குமாா், கமலேஷ், பாபுபிரசாத், சிவபாலன், இந்துமதி, செல்வபிரியா, ஹரிகிருஷ்ணன், புவனேஸ்வரி, கெளதம், சுகன்யா, கனகாம்பாள், அபிஷேக், லோகேஷ், பேருந்து ஓட்டுநரான மாரசாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். இதில், 5 கல்லூரி மாணவா்கள் படுகாயமடைந்தும், 2 போ் சுயநினைவு இல்லாமலும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அதிவேகமாக பேருந்தை இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் முழுவதும் அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. தெரிவித்தாா்.
இந்த விபத்து தொடா்பாக ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்து காரணமாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிவேகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை தேவை
திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கும் இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் அதிக வேகமாக இயக்கப்படுவதாக நீண்ட நாள்களாகவே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரசுப் பேருந்துகளுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிக பயணிகளை ஏற்றுவதற்காகவும், கல்லூரி மாணவா்களை பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதிப்பதும் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணமாக அமைகிறது. ஆகவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், காவல் துறையினா் அதிவேகமாக இயக்கப்படும் தனியாா் பேருந்துகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.
விபத்தில் காயமடைந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் நேரில் சந்திந்து ஆறுதல் தெரிவித்தாா்.