திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மலம்; மது போதையில் அட்டூழியம்.. 4 பேரிடம் விசாரணை
திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்தநிலையில், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது. குழந்தைகள் குடிக்கிற தண்ணீரில் மலம் கலந்தவர்கள் மனித மிருகங்கள் என பலரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு அருகிலேயே வசிக்கும் நான்கு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதலில் நாங்கள் தான் செய்தோம் என சொன்னவர்கள் தற்போது மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த விவகாரம் நடந்திருப்பது கடும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.
மது போதையில் பள்ளியில் செய்த அட்டூழியம்
இது குறித்து காரியாங்குடி பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ஞாயிறு மாலை நான்கு இளைஞர்கள் பள்ளிக்குள் உடும்பு பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். பள்ளியில் உள்ள சமையலறை பூட்டை உடைத்து மளிகை பொருள்கள், பாத்திரம் எடுத்து சமைத்திருக்கிறார்கள். பின்னர் பள்ளி வளாகத்தில் மது குடித்துள்ளனர். மது போதையில் வாழை மரத்தில் முழு வாழை இலையை வெட்டி அதில் சமைத்த உடும்பு கறியை போட்டு சாப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே போதை தலைக்கேறியவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் குடிநீர் தொட்டியின், பைப்பும் உடைந்து விட்டது. அதன் பிறகு நடந்தவை கொடுமையின் உச்சம். இரண்டு பேர் தனி தனியாக குடிநீர் தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்துவிட்டு அந்த தண்ணீரில் கழுவி உள்ளனர். சாவகாசமாக பள்ளியில் இதை செய்து விட்டு இரவானதும் வெளியே சென்று விட்டனர்.
நேற்று வழக்கம் போல் காலை உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு வந்த சமையலர்கள் பள்ளி வளாகம் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுதாரித்தவர்கள் தண்ணீர் தொட்டியிலும் ஏறி பார்க்க மலம் கிடந்துள்ளது. குமட்டிகொண்டு வர அடப்பாவீங்களா இந்த காரியத்தை யார் செய்திருப்பார்கள் என புலம்பி கொண்டே எல்லோருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பிறகு நடந்த விசாரணையில் இவை தெரியவந்துள்ளது.

நான்கு பேரிடம் விசாரணை
இது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ரைட்டராக பணியாற்றுபவரின் இரு சகோதரர்கள் மற்றும் இருவர் என மொத்தம் நான்கு பேர் இந்த செயலை செய்திருப்பதாக தெரிய வருகிறது. முதலில் `நாங்கள் தான் செய்தோம்' என போலீஸில் ஒப்புக்கொண்டவர்கள் பின்னர் `நாங்கள் செய்ய வில்லை' என்றும் கூறி வருகிறார்கள். முதல்வரின் மாவட்டம் என்பதால் போலீஸ் இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகிறது.
பள்ளி இல்லாத நாள்களில் இது போல் அடிக்கடி மர்ம நபர்கள் பள்ளிக்குள் சென்று மது அருந்துவது வழக்கம். இதனை தடுக்கவில்லை என்றால் அசம்பாவிதம் ஏற்படும் என அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது குடிநீர் தொட்டிக்குள் மலம் கலக்கும் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர்.